அரசின் ரகசிய ஆவணங்களை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் டொனால்ட் டிரம்ப் விடுதலை செய்யப்பட்டார்.
தனது பண்ணை வீட்டில் அரசின் ரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருந்தது. இது குறித்து வழக்கு நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் ஃப்ளோரிடா மாகாண நீதிபதி ஐலியின் கேனான் வெளியிட்ட தீர்ப்பில் கூறப்படுவதாவது, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்மித் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதிபதி கேனான் கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ட்ரம்பால் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பு மூலம் அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதற்கான சட்ட சிக்கல்களில் ஒன்று நீங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்த டிரம்ப் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து வெள்ளை மாளிகையை விட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியேறினார். அப்போது அவர் அரசு ஆவணங்கள் அடங்கிய 15 பெட்டிகளை எடுத்துச் சென்றதாகவும் அதில் சில ஆவணங்கள் ரகசியமானது என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.