தனியார் பள்ளிகளுக்கு 2021-22-ம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகை ரூ.364 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 3.98 லட்சம் குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்விக் கட்டணம் தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில் தரப்படும்.
இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டண நிலுவையை துரிதமாக வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு தனியார் பள்ளி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதையேற்று தனியார் பள்ளிகளுக்கு 2021-22-ம் கல்வியாண்டில் வழங்க வேண்டிய கல்விக் கட்டண நிலுவைத் தொகை ரூ.364.43 கோடியை தமிழக அரசு தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது.