துருக்கி மற்றும் சிரியா பகுதியில், சில தினங்களுக்கு முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, உலகின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில், துருக்கியை பாதித்த அளவில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இந்தியாவின் உத்தரகாண்ட் பகுதியில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜியோ பிஸிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை சீஸ்மாலஜி விஞ்ஞானியான டாக்டர். என். பூர்ண சந்திர ராவ் இதனை தெரிவித்துள்ளார். மேலும், நிலநடுக்கம் எப்போது வேண்டுமானாலும் நேரலாம் என எச்சரித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “உத்தரகாண்ட் பகுதிக்கு அடியில், பூமிக்கடியில், அதிக அழுத்தம் உள்ளது. இதன் விளைவாக, ரிக்டர் அளவுகோலில் 8க்கும் மேற்பட்ட அளவில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும். இதனை தவிர்க்க முடியாது. மேலும், நிலநடுக்கம் ஏற்படக்கூடிய நேரம் மற்றும் காலம் ஆகியவற்றை வேறு சில காரணிகளும் நிர்ணயிக்கும் என்பதால், அதனை கணிக்க முடியாது. இந்தப் பகுதியைச் சுற்றி சுமார் 80 நிலையங்களை அமைத்துள்ளோம். அவற்றில் உள்ள ஜிபிஎஸ் புள்ளிகள் தொடர்ந்து மாற்றம் அடைந்த வருவது பூமிக்கு அடியில் அதிக அழுத்தம் உள்ளதை உறுதி செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை நீண்டு காணப்படும் இமாலயப் பிராந்தியத்தில் பூகம்பம் நேர்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் அந்தப் பகுதியில் நேர்ந்த பூகம்பங்களை அவர் சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.