துருக்கி நாட்டின் குறைந்தபட்ச மாதாந்திர ஊதியம், ஜூலை மாத நிர்ணயத்தில் இருந்து 55% உயர்த்தப்படும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி தாயிப் எர்டோகன் நேற்று அறிவித்துள்ளார். இது கடந்த ஜனவரி மாத ஊதியத்துடன் ஒப்பிடுகையில் 100% உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, வரும் ஜனவரி 2023 முதல், துருக்கியின் குறைந்தபட்ச மாத சம்பளம் 8506.80 லிரா ($455) ஆகும்.
துருக்கி நாட்டில், கடந்த சில மாதங்களாக, வருடாந்திர பணவீக்கம் 85% க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக எர்டோகன் கூறியுள்ளார். மேலும், அரசாங்கத்தின் நேரடி தலையீட்டால், பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இதில் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, பணியாளர்கள் சம்பளத்திற்கு மட்டுமே பெரும் தொகை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இதற்கு நிறுவனங்கள் தரப்பிலிருந்து கடும் அதிருப்தி எழுந்துள்ளது. எனவே, ஜவுளித்துறை உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் குறைக்கப்படுவர் என்று கருதப்படுகிறது.