துருக்கி மற்றும் சிரியா பகுதியில், கடந்த பிப்ரவரி 6ம் தேதி, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், அந்த பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகி, பகுதி எங்கும் கட்டிடக் குவியல்களாக காட்சியளிக்கிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையைத் தொலைத்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. துருக்கியில் 39672 என்ற எண்ணிக்கையிலும், சிரியாவில் 5800 என்ற எண்ணிக்கையிலும் உயிர் இழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, எண்ணற்ற மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருப்பதால், உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, 11 நாட்களுக்கு பிறகும் ஒரு சில பேர் உயிருடன் மீட்கப்படும் அதிசயமும் நிகழ்ந்து வருகிறது.