ஜம்முவில் இன்று காலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்முவில் உள்ள நர்வால் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் அடுத்தடுத்து 2 இடங்களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள், குண்டுவெடிப்பு நடந்த பகுதி முழுவதும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். வெடித்த குண்டுகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பையொட்டி நர்வால் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தினத்துக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் ஜம்மு- காஷ்மீரில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்முவில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததையடுத்து ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஜம்முவில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள சத்வால் என்ற இடத்தில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.