ட்விட்டர் சமூக வலைத்தளத்தில், சரிபார்க்கப்பட்ட அல்லது உறுதி செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு (Verified Users) ப்ளூ டிக் அம்சம் இடம்பெறும். கடந்த வருட ஜூன் மாதம் முதல் இந்த அம்சம் கொடுக்கப்பட்டு வருகிறது. எலான் மஸ்க் இந்த நிறுவனத்தை வாங்கியவுடன், இந்த அம்சத்தை பெற மாதம் 20 டாலர் வரை வசூல் செய்யப்படலாம் என்ற வதந்திகள் நிலவின. இந்நிலையில், இந்த அம்சத்தை பெறுவதற்கு தற்போது மாதம் 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். தற்போதைய நிலையில், பிரபலங்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே இந்த ப்ளூ டிக் அம்சம் செயல்படும் நிலை உள்ளது. இனிமேல், இதனை யார் வேண்டுமானாலும் பெறக்கூடிய நிலை கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், “ப்ளூ டிக் இருப்பவர் மற்றும் இல்லாதவர் என்ற பாகுபாடுடன் கூடிய ட்விட்டரின் ஆண்டான் அடிமை முறை தவறானது ஆகும். தற்போது மக்களுக்கே அதிகாரம் வழங்கப்படுகிறது. மாதம் 8 டாலர் செலுத்தும் எவருக்கும் இந்த அம்சம் கொடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த கட்டணம், ஒவ்வொரு நாட்டின் சந்தாதாரர்கள் அடிப்படையிலும், நாணய மதிப்பிற்கு ஏற்பவும், மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ப்ளூ டிக் அம்சம் பெறுபவர்களுக்கு சிறப்பு முன்னுரிமைகளும் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். குறிப்பாக, ரிப்ளை செய்வது, மென்ஷன் சர்ச் செய்வது ஆகியவற்றில் முன்னுரிமையும், வழக்கத்தை விட நீளமான ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் செய்வதற்கான அனுமதியும் கொடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், ப்ளூ டிக் பயனர்களுக்கு, மத்த பயனர்களை விட பாதி அளவு விளம்பரங்களே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ட்விட்டர் மூலம் பணி செய்யும் பதிப்பாளர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்த கருத்துக்கணிப்பில், 80% ட்விட்டர் பயனாளர்கள் ப்ளூ டிக் அம்சம் பெறுவதற்கு கட்டணம் செலுத்த விருப்பமில்லை என தெரிவித்துள்ளனர். மேலும், 10% பயனர்கள், ஒரு மாதத்திற்கு 5 டாலர் வரை செலுத்த தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே, இந்த அறிவிப்பு உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.