ட்விட்டர் நிறுவனத்தில் புதிதாக பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்ட பணி நீக்கத்தில், டேட்டா சயின்டிஸ்ட்கள், ப்ராடக்ட் மேனேஜர்கள் மற்றும் மிஷின் லேர்னிங் துறையில் பணியாற்றிய பொறியாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன், இந்த முறை, கிட்டத்தட்ட 200 பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது மொத்த ட்விட்டர் ஊழியர்கள் எண்ணிக்கையில் 10% என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் மாதத்தில், எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, நவம்பர் மாதத்தில், நிறுவனத்தில் மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அலுவலகத்திலேயே தங்கி இருந்து வேலை செய்யும்படி ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அப்போது, அலுவலகத்திலேயே தூங்கும் படியாக ஊழியர் ஒருவரின் புகைப்படம் பகிரப்பட்டது. இந்நிலையில், அந்த ஊழியரும், தற்போதைய பணி நீக்கத்தில் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.