ட்விட்டர் நிறுவனத்திற்கு, விளம்பரங்கள் வாயிலாகவே பெருமளவு வருவாய் கிடைத்து வந்தது. இந்நிலையில், நிறுவனத்தின் விளம்பர வருவாய் பாதியளவுக்கும் கீழ் குறைந்துள்ளது. எனவே, ட்விட்டர் நிறுவனம் கடன் சுமையில் மூழ்கி வருவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்தே, எலான் மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக, ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு மட்டுமே பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான பயனர்களை ட்விட்டர் இழந்தது. இதே வேளையில், மெட்டா நிறுவனத்தின் திரேட்ஸ் செயலி அறிமுகம் ஆகி உள்ளது, ட்விட்டருக்கு கடும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.
எலான் மஸ்க் கொண்டு வந்த அதிரடி நடவடிக்கைகளால், விளம்பரதாரர்கள் நம்பிக்கை இழந்தனர். பலர் ட்விட்டரை விட்டு விலகினர். விளம்பரதாரர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமிக்கப்பட்டார். ஆனாலும், ட்விட்டர் பொது பயனர்களுக்கு விதிக்கப்படும் பல்வேறு கட்டுப்பாடுகளால், விளம்பரதாரர்களை ஈர்க்கும் முயற்சி முழுமையான வெற்றி அடையவில்லை. எனவே, ட்விட்டர் நிறுவனம் கடனில் மூழ்கி வருவதாகவும், நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். ட்விட்டர் பயனர் ஒருவருக்கு அளித்த ட்விட்டர் பதிலில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.