மத்திய பிரதேச மாநிலம் சிங்பூர் ரயில் நிலையம் அருகே, 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் காட்னிக்கு நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில், சிங்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு சரக்கு ரயில் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ரயில் ஓட்டுநர் ராஜேஷ் பிரசாத் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பீகார் மாநிலம் முசாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். மேலும், ரயில்வே ஊழியர்கள் 5 பேர், இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
விபத்தை தொடர்ந்து, சரக்கு ரயில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்து வருவதால், ரயில் நிலையம் காலி செய்யப்பட்டுள்ளது. மேலும், பிலாஸ்பூர் - காட்னி வழித்தடத்தில் இயங்கும் அனைத்து ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பகுதியில் அதிகாரிகள் மீட்பு பணியில் களமிறங்கி உள்ளனர்.