கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், அமைச்சர் ஒருவரை அவரது பாதுகாவலரே சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
உகாண்டாவில், யோவேரி முசெவெனி தலைமையிலான அரசு இயங்கி வருகிறது. இதில் தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக சார்லஸ் எங்கோலா பதவி வகித்து வந்தார். இந்நிலையில், நேற்று அவரது பாதுகாவலரே அவரை சுட்டுக் கொன்றதாக தகவல் வெளிவந்துள்ளது. அமைச்சரை சுட்ட பிறகு, வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பாதுகாவலர், இறுதியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை உகாண்டா ராணுவம் வெளியிட்டுள்ளது. மேலும், “அமைச்சர் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில், இந்த தாக்குதலுக்கான நோக்கம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்” என்று ராணுவம் கூறியுள்ளது. அத்துடன், அமைச்சரை சுட்டுக்கொன்ற பாதுகாவலரின் விவரங்களை வெளியிட மறுத்துள்ளது.