மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மகா காலேஸ்வர் கோயிலின் முதல் கட்டப் புனரமைப்பு பணிகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
நாட்டில் அமைந்துள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் உஜ்ஜைன் நகரில் உள்ள மகா காலேஸ்வர் கோயிலும் ஒன்றாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகா காலேஸ்வர் கோயிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இந்த கோயிலை `மகா காலேஸ்வர் லோக்’ என்ற பெயரில் ரூ.850 கோடியில் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கோயிலுக்கு அருகேயுள்ள ருத்ரசாஹர் ஏரிப் பகுதியில் 900 மீட்டர் நீளத்துக்கு மிகப்பெரிய பிரகாரமும், அதைச்சுற்றி 200 சிலைகளும், சிவன், சக்தி சிலைகளும் அமைக்கப்பட்டன. மேலும், கடவுள்களின் சுவரோவியங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து நந்தி துவார் மற்றும் பினாக்கி துவார் என்ற 2 நுழைவுவாயில்களும் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் பக்தர்கள் கோயிலின் நுழைவு வாயிலில் சென்று சாமி தரிசனம் செய்து பிரகாரத்துக்கு செல்லலாம். சுண்ணாம்புக் கற்களால் வடிவமைக்கப்பட்ட 108 தூண்கள் பிரகாரத்தில் நிறுவப்பட்டுள்ளன. பிரகாரத்தையொட்டி அழகான நீர் ஊற்றுகள், சிவபுராணத்தை கூறும் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ மகா காலேஸ்வர் லோக் புனரமைப்புத் திட்டத்தின் மதிப்பு ரூ.856 கோடியாகும். தற்போது, முதல்கட்டமாக ரூ.316 கோடிக்கு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து 900 மீட்டர் தூரத்துக்கு பிரகாரம் உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.