நீரவ் மோடி மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது, நீதிபதிகள் அவரது மேல்முறையீட்டில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் தேவையற்றவை என்று ஒப்புக்கொண்டனர்.
ஆகவே அவரை இந்தியாவுக்கு அனுப்பி சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது நல்லது என்று கூறி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து நீரவ் மோடி தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 2 வார கால அவகாசம் கோரி, லண்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது லண்டனில் உள்ள ராயல் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் நிரவ் மோடியின் மேல்முறையீடு கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர். இதன்மூலம், நீரவ் மோடிக்கு இருந்த அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அவர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.