உக்ரைனில் பெரிய அணையை தகர்க்க இருப்பதாக ரஷியப்படைகள் மீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையில் போர் நடைபெற்று வருகிறது. சமீப காலமாக இரு நாடுகளும் மாறி மாறி டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் முக்கியமான டினீப்ரோ ஆற்றில் கட்டப்பட்டுள்ள நோவா ககோவ்கா அணையை ரஷியா வேண்டுமென்றே நிரம்பச் செய்து உடைத்துவிட்டதாகவும், பாதிப்பு உள்ளாகும் இடத்தில் உள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
கெர்சன் பகுதியின் தலைவர் ஒலெக்சான்டர் கூறுகையில், அணையில் தண்ணீர் மோசமான நிலையை இன்னும் ஐந்து மணி நேரத்தில் எட்டும். தற்போது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தும் பணி தொடங்கியதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் இடைக்கால உள்துறை மந்திரியின் ஆலோசகராக இருக்கும் ஆண்டோன் ஜெராஷ்சென்கோ, குண்டு வைத்து தகர்த்ததாகவும், இதற்கு பின்னால் ரஷியா உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் ரஷியா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.