உக்ரைன் நாட்டின் இசியம் பகுதி, வெகுநாட்களாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அந்த நகரை உக்ரைன் நாடு மீட்டெடுத்தது. உக்ரைன் ராணுவத்தின் எதிர்பாராத தாக்குதல் காரணமாக, ஆயுதங்களை அங்கேயே விட்டுவிட்டு, ரஷ்யப் படைகள் பின்வாங்கின. தற்போது, இசியம் பகுதியைச் சுற்றி உள்ள கார்கீவ் மாகாணம், முழுமையாக உக்ரைன் நாட்டின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது. அண்மையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அந்தப் பகுதிகளைப் பார்வையிட்டார். அதன் பின்னர், இசியம் பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக சான்றுகளை உக்ரைன் நாடு வெளிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இசியம் காட்டுப் பகுதியில், பிணக்குவியல்கள் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளது. இதுவரை, 450 சடலங்கள் அங்கு கண்டறியப்பட்டுள்ளதாக உக்ரைனின் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு குழியிலும் பத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் கூட்டாகப் புதைக்கப்பட்டு உள்ளதாகக் கூறியுள்ளது. இதன் மூலம், ரஷ்யாவின் மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. மேலும், இது குறித்து மனித உரிமை அமைப்பினர் விரைவில் ஆய்வு நடத்த வேண்டும் என்று ஐநா சபை கூறியுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரஷ்யா தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த உக்ரைன் நகரங்களில் எல்லாம், வெறும் சடலங்களை விட்டுச் சென்றுள்ளது. ஒரே இடத்தில் சுமார் 450 சடலங்கள் வரை நாங்கள் கண்டெடுத்து உள்ளோம். ராணுவத்தினரின் உடல்களும் குவியல்களாக அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு ரஷ்யா உரிய பதில் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.