உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போலாந்து நாடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அரசு முறை பயணமாக போலாந்து சென்றுள்ளார். இவரது பயணத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவடைந்து, ரஷ்யாவுக்கு எதிரான போரில் பல உதவிகள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
கடந்த வருடம், உக்ரைன் - ரஷ்யா இடையில் போர் மூண்டபோது, லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக போலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். 13 மாதங்களுக்கும் மேலாக, போலந்து, உக்ரைன் மக்களுக்கு ஆதரவளித்து வருகிறது. இந்நிலையில், ஜெலன்ஸ்கி, போலந்தில் உள்ள அகதிகளை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், போலந்து நாட்டின் அதிபர் மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளை மீட்க, ஜெலன்ஸ்கி விரைவில் எதிர் தாக்குதல் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த பயணம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.