இந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் வருடாந்திர லாபம் 42% சரிந்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 755.73 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. விற்பனையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், லாபத்தில் 42 சதவீத சரிவு பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 15.6% உயர்ந்து, 13893 கோடியாக பதிவாகியுள்ளது.
நிறுவனத்தின் லாபத்தில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, சிமெண்ட் விலை உயர்வே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அத்துடன், நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இந்தியாவில் ஒவ்வொரு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டும் வளர்ச்சி தடைபடும் காலமாகும். இந்தியாவில் இந்த மாதங்களில் பருவ மழையின் காரணமாக, கட்டுமான வேலைகளில் தேக்க நிலை ஏற்படும். இதனால், சிமெண்ட் விற்பனை குறையும். எனவே, இந்த காலாண்டில் ஏற்பட்டுள்ள சரிவு இதன் பகுதியாகும். அடுத்தடுத்த மாதங்களில் இந்த நிலைமை சீராகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் EBITDA மதிப்பு, வருடாந்திர அடிப்படையில், 31% குறைந்து, 1866.64 கோடியாக பதிவாகியுள்ளது. இதற்கு மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் எரிபொருள் விலை ஏற்றம் ஆகியவை காரணமாக கூறப்படுகிறது. வருடாந்திர அடிப்படையில், மூலப்பொருட்களின் விலை 16 சதவீதமும், எரிபொருட்களின் விலை 70 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட வர்த்தக சிக்கல்கள் ஏற்பட்ட போதிலும், அல்ட்ராடெக் நிறுவனம், சிமெண்ட் விற்பனையில் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த காலாண்டில் அல்ட்ராடெக் சிமெண்ட் விற்பனை 9.6% உயர்ந்துள்ளது. அத்துடன், நிறுவனத்தின் சிமெண்ட் இருப்பும் அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில் நிறுவனத்தின் சிமெண்ட் இருப்பு 7% அதிகரித்து, 23.1 மில்லியன் டன்களாக உள்ளது. ஆனால், நிறுவனத்தின் கடன் மதிப்பு கடந்த காலாண்டில் உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில், 5561 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த கடன் மதிப்பு இரண்டாம் காலாண்டில் 8357 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு விற்பனையில் முன்னேற்றம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் லாபத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.