மனித குலத்தின் உணவுத் தொடர்பான தேடலே அவர்களது பண்பாட்டு வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதனையே "உண்டி முதற்றே உலகு" என்று கூறுகின்றனர். சங்க இலக்கியங்களில் காணப்படும் உணவுக் கலாச்சாரம் தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சிக்குச் சான்றாகும். இலக்கியத்தில் "உணவு" என்பதற்குக் காணப்படும் குறிப்பு பெரும் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது. "உணவெனப் படுவது நிலத்தொடு நீரே" என்பதே அது. இந்தப் புரிதல் மிக மிக நுட்பமானதும், மிகவும் ஆச்சரியப்படத்தக்கதும் ஆகும். ஒவ்வொரு உணவினுடையக் கூறும், நிலத்தையும் நீரையும் சார்ந்திருக்கிறது என்ற புரிதல் சங்க இலக்கிய காலத்திலேயே தமிழர்களிடம் இருந்திருக்கிறது.
மேலும் உண்ணுதல் என்பது ஓர் உடல் சார்ந்தத் தேவையாக இல்லாமல் சமூகம் சார்ந்த செயலாகவே சங்ககாலத்தில் நோக்கப்பட்டிருக்கின்றது. அக்காலத்தில் விருந்தினருக்கு உணவு படைப்பதற்குக் கொடுக்கப்பட்ட முதன்மையும், குடும்பம் மற்றும் ஊர் சார்ந்த நிகழ்வுகளில் உணவு பெற்றிருந்த சிறப்பும், உணவின் சமூகச் சார்பைப் புலப்படுத்துகின்றன. மேலும் மனிதன் உயிர் வாழ்வதற்கான உணவைக் கொடுப்பது மிகவும் போற்றுதலுக்குரியதாகப் பார்க்கப்பட்டது. "உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே" என்றப் பழமொழி இதனை எடுத்துக்கூறுகிறது.
தொல்காப்பியர் ஐந்து வகை நிலங்களுக்குமான உணவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:
- முல்லை நிலமக்களுக்கு உணவு- வரகு, சாமை
- குறிஞ்சி நில மக்களுக்கு உணவு – திணை, தேன், மூங்கிலரிசி
- மருதநில மக்களுக்கு உணவு – செந்நெல், வெண்ணெல்
- நெய்தல் நிலமக்களுக்கு உணவு – உப்புக்கு விலைமாறிய பண்டம், மீனுக்கு விலைமாறிய பண்டம்
- பாலை நில மக்களுக்கு உணவு – ஆறலைத்த பொருள், சூறை கொண்ட பொருள்
இவற்றிலிருந்து அறியமுடிவது என்னவென்றால் உணவு ஒரு சமூகத்தின் அடையாளமாகவும் ஆகின்றது. தமிழர்களின் உணவிற்கான அடையாளமாக,
"கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு
இந்நான்கு அல்லது உணாவும் இல்லை"
என்றப் புறநானூற்றுப் பாடல் திகழ்கின்றது. வரகு, தினை, கொள்ளு, அவரை ஆகியவையே எங்கள் உணவு, மற்றவை எங்கள் உணவு அல்ல என்பதே பாடலின் கருத்து. மேலும் சங்க இலக்கியத்தில் தினைப் புனங்களைக் காவல் காப்பதாக அறுபதுக்கும் மேற்பட்ட குறிப்புகள் வருகின்றன. இவை, தமிழர்களின் உணவு முறையில் சிறுதானியங்கள் முக்கியப்பங்கு வகித்ததை உணர்த்துகின்றன. சங்கத் தமிழர் தத்தமது சூழலில் விளைந்த/பெறப்பட்ட உணவுவகைகளைக் கொண்டு குறைவிலாது தம் தேவைகளை நிறைவேற்றியுள்ளனர். பெரும் ஆடம்பரமற்ற எளிமையான உணவுப் பழக்கமே சங்கம் எங்கும் பரவிக் கிடந்தது என்பது உறுதியாகின்றது.
சங்க இலக்கியங்களில் ஆணித்தரமாகப் பதிவிடப்பட்டன மற்றொரு கருத்து "உணவே மருந்து" என்பதாகும். சங்ககாலக் குறிப்புகளில் கார், கூதிர், முன்பனி, பின்பனி, முதுவேனில் என ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தனித்தனி உணவு வகைகளைப் பிரித்து வைத்துள்ளார்கள். எந்த சுவையுள்ள உணவை எந்த பொழுதில் கொடுக்க வேண்டும் என காலத்திற்கேற்ப உணவு வகை வகுக்கப்பட்டுள்ளது. வயதானவர்களுக்குக் கஞ்சி வகை உணவுகள் கொடுக்க வேண்டும் எனவும் குழந்தைகளுக்குப் பிஞ்சு காய்கறிகளைத் தரவேண்டும் என்றும் முற்றிய காய்களை வளர்ந்த வாலிப வயதுடையவர்களுக்கு உண்ணக்கொடுக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது, செரிமானம் குறித்த அனுபவப் புரிதல் அப்போதே தமிழர்களுக்கு இருந்ததை உணர்த்துகிறது.
மேலும், பழந்தமிழர் உணவு உண்பதில் அளவை மேற்கொண்டிருந்தனர். பெருந்தீனி தின்றால் நோயும், சிறுதீனி தின்றால் வலுவிழப்பும், நோயும் வரக்கூடும் என்றறிந்து, “உண்பது நாழி உடுப்பவை இரண்டே” என்று அளவோடு வாழ்ந்தனர்.
சங்ககாலத்தில் ‘மடை நூல்’ என்னும் பெயரில் வீமசேனன் என்பவர் எழுதிய சமையற்கலை நூல் இருந்தது என்று சிறுபாணாற்றுப்படைப் பாடல் கூறுகிறது. மேலும், உணவின் சுவைகளை ஆறாகப் பிரித்தறிந்தனர். அவை, இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு, கைப்பு, புளிப்பு ஆகியன. இவை முறையே ஆற்றல், வீறு, வளம், தெளிவு, மென்மை, இனிமை ஆகிய வற்றைத் தருவன. இதை நம் முன்னோர் அறுசுவையாக அமைத்துக் கொண்டாடினர்.
“அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கி உண்டாரும்.”
என்பது நாலடியார். உணவு உண்ணும் முறைகளைக் கூடப் பன்னிரெண்டாக வகுத்திருந்தனர். அவையாவன, அருந்துதல், உண்ணல், உறிஞ்சல், குடித்தல், தின்றல், துய்த்தல், நக்கல், நுங்கல், பருகல், மாந்தல், மெல்லல், விழுங்கல் என்பனவாகும்.
மேலும், உணவைக் குறிக்கும் எண்ணற்ற சொற்கள் இலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. அவற்றுள் சில: ஊன், உணவு, உண்டி, அடிசில், அமலை, அமுது, அயினி, களி, கூழ், கலவை, சூடு, சோறு, திற்றி, துழவை, நுவணை, பண்ணியம், பதம், பிளவை, பொம்மல், மிதவை, வல்சி, வாட்டு, விசயம், வேவை ஆகியன.
இதன் மூலம், உலகின் மற்ற இடங்களிலெல்லாம் வேட்டையாடும் நாகரிகமே இருந்த காலகட்டத்தில், தமிழரின் உணவு மேம்பட்ட நாகரிகமும், கலைத் தன்மையும் கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது. உலகிலேயே தமிழர்களின் உணவுப் பண்பாடுதான் மிகவும் சிறப்பானது என்பதில் ஐயமில்லை.