இந்தியாவில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்காக, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்றைய பட்ஜெட் அறிவிப்பின்படி, இதற்காக 1891.78 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெற உள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் ஆகியவற்றுக்காக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க வேண்டும் எனவும், பிரத்தியேகமாக நிதி ஒதுக்க வேண்டும் எனவும், சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்ததன்படி, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான பட்ஜெட் அறிக்கை விவரங்கள் வருமாறு: "புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பழைய இயந்திரங்களை பாதுகாப்பாக அழிப்பது ஆகியவற்றுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது."