கடந்த வாரத்தில், தொடர்ச்சியாக சூரிய புயல்கள் பூமியைத் தாக்கியுள்ளன. குறிப்பாக, பிப்ரவரி 26, 27 ஆம் தேதிகளில், தீவிரமான சூரிய புயல்கள் பூமியை தாக்கியுள்ளன. சூரிய புயல் தாக்குதலை முன்னிட்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவும் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சூரிய புயலால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிப்ரவரி 27ஆம் தேதி, ஜி3 ரக அதித்தீவிர சூரிய புயல் பூமியை தாக்கியுள்ளது. இதனால், கொலராடோ பகுதியில் ஆரோராக்கள் தென்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தவிர, பிரிட்டனின் பகுதிகளிலும் ஆரோராக்கள் காணப்பட்டன. அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 28ஆம் தேதி, ஏஆர் 3234 என்ற சூரிய புள்ளி வெடித்ததன் காரணமாக, எம்8.6 ரக சூரிய புயல் ஏற்பட்டது. இந்த சூரிய புயலால், அமெரிக்காவில் பல பகுதிகளில் தொலை தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள்,தென் அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடாவைச் சேர்ந்த பகுதிகளில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொலைத் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டதால், சிறிய ரக கப்பல்கள், விமானங்கள் மற்றும் ட்ரோன்களைத் தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.