வெளிநாடு வாழ் இந்தியர்கள், இனிமேல் தங்களது சர்வதேச கைப்பேசி எண் மூலமாகவே யுபிஐ பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்று இந்தியாவின், நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட 10 உலக நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு சர்வதேச எண் மூலமாக யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படுவதாக ஜனவரி 10ஆம் தேதி வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற நாடுகளுக்கு விரைவில் இந்த சலுகை அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ கணக்கு வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இது சாத்தியமாகும். மேலும், வங்கியின் அனைத்து பாதுகாப்பு ஒழுங்கு முறைகளை பூர்த்தி செய்துள்ள கணக்குகளுக்கு மட்டுமே இந்த முறை செயல்படுத்தப்படும்” - இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.