2024-ம் ஆண்டின் இறுதி வானியல் நிகழ்வான உர்சிட் விண்கல் மழை, டிசம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் உச்சத்தை எட்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வால்மீன் 8P/டட்டில் விட்டுச் சென்ற எச்சங்களை பூமி கடந்து செல்லும் போது, உர்சிட் விண்கல் மழை ஏற்படுகிறது. உர்சா மைனர் விண்மீன் தொகுப்பிலிருந்து வெளிப்படும் விண்கற்கள், பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் தெளிவாகத் தெரியும். டிசம்பர் 17 முதல் 26 வரை நீடிக்கும் இந்த விண்கல் மழையை, நள்ளிரவு முதல் விடியற்காலை வரை தெளிவாக காணலாம். இருண்ட மற்றும் மேகமில்லாத வானில், ஒரு மணி நேரத்திற்கு 5 முதல் 10 விண்கற்களை பார்க்க முடியும். சில சமயங்களில், ஒரு மணி நேரத்திற்கு 100 விண்கற்கள் வரை பொழியும் அதிசய நிகழ்வு நடைபெறும். இந்த அற்புத காட்சியைக் காண, எந்தவித சிறப்பு உபகரணங்களும் தேவையில்லை. குளிர்கால சங்கிராந்தியுடன் இணைந்து நிகழும் இந்த அற்புத நிகழ்வு, வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்.