சீன ராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக செயல்பட்ட 6 சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் புதிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் வான்பரப்பில் அத்துமீறி சீனாவின் உளவு பலூன் பறந்தது என்ற விவகாரம் கடந்த வாரத்தில் பரபரப்புடன் பேசப்பட்டது. எனினும், அது ஆராய்ச்சிக்காக அனுப்பிய பலூன் என்றும் தவறுதலாக அமெரிக்க வான்பரப்புக்குள் நுழைந்து உள்ளது என சீனா கூறியது. எனினும், அமெரிக்கா அதனை சுட்டு வீழ்த்தியது. தொடர்ந்து 2-வது முறையாக அத்துமீறிய மர்ம பொருளையும் வாஷிங்டன் சுட்டு வீழ்த்தியது. உலகம் முழுவதும் 5 கண்டங்கள் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் வான்பரப்பில் அத்துமீறி இதுபோன்ற உளவு பலூன் திட்டத்தில் சீனா ஈடுபட்டு வருகிறது என்றும் சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டை சுமத்தியது.
இந்நிலையில், தி நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், சீன ராணுவத்தின் நவீன மயமாக்கலுக்கு ஆதரவாக பல சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு அமெரிக்க அதிபர் பைடனின் அரசாங்கம் அதுபோன்ற 6 சீன நிறுவனங்களுக்கு புதிய தடைகளை விதித்து உள்ளார். அமெரிக்க வான்பரப்பில் சீன உளவு பலூன் பறந்ததற்கு எதிர்வினையாற்றும் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.இதனால், சிறப்பு உரிமம் இன்றி அமெரிக்காவின் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களை சீன நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும்.