இஸ்ரேல் ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்தினால் அதில் அமெரிக்கா பங்கேற்காது. இஸ்ரேல் தனியாகத்தான் போரிட வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஈரானை திருப்பித்தாக்கி போர் சூழலை ஏற்படுத்த வேண்டாம் என்று இஸ்ரேலை மேற்கத்திய நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன. இது குறித்து அமெரிக்காவில் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ஈரான் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தினார். இது குறித்து பிராந்திய நாடுகளுடன் ராஜீய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினார். அதே சமயத்தில் இஸ்ரேல் ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்தினால் அதில் அமெரிக்கா பங்கேற்காது. இஸ்ரேல் தனியாகத்தான் போரிட வேண்டும். ஈரான் ஏவுகணைகளில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க மட்டுமே உதவும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் டேவிட் கேமரூன் கூறுகையில், தங்களது துணை தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்கும் உரிமை ஈரானுக்கு உள்ளது என்று கூறியுள்ளார். அதே சமயத்தில் பெரிய சேதாரம் ஏற்படுத்தக்கூடிய ஏவுகணைகளையும், டிரோன்களையும் ஈரான் சரமாரியாக வீசியது தவறு என்று கூறியுள்ளார். அதே சமயத்தில் இஸ்ரேல் பிராந்திய போர் பதற்றத்தை தூண்டும் எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றார். இதே பட்டியலில் பிரான்ஸ் நாடும் இணைந்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நடைபெறாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் பிரான்ஸ் மேற்கொள்ளும் என்று அதன் அதிபர் இமானுவல் கூறியுள்ளார். இதேபோன்று பெல்ஜியமும் வலியுறுத்தியுள்ளது.