அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள், விண்வெளி துறையில் இணைந்து பணியாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதற்காக, வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் நடைபெற்ற விழாவை, நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன், துணை நிர்வாகி பாம் மெல்ராய் ஆகியோர் தொகுத்து வழங்கினர். அமெரிக்க செயலாளர் ஆன்டனி ஜே. பளிங்கின் மற்றும் ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹயாஷி யோஷிமஷா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
விண்வெளித் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதை இந்த ஒப்பந்தங்கள் உறுதி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் வாஷிங்டன் வருகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தங்கள் மூலம், இரு நாடுகளின் விண்வெளி வலிமையும் அதிகரித்துள்ளதாக கிஷிடா தெரிவித்துள்ளார். மேலும், மனித குலத்தின் எதிர்காலத்திற்கு இந்த ஒப்பந்தங்கள் துணை நிற்கும் என்று அமைச்சர் ஹயாஷி தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த நவம்பர் மாதத்தில், இரு நாடுகளும் இணைந்து நிலவு ஆராய்ச்சி குறித்த மற்றொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.