இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு பழங்கால பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. அவற்றை மீட்கும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சுமார் 307 பழங்கால பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அன்று இது தொடர்பாக செய்து குறிப்பை வெளியிட்ட அமெரிக்கா, 15 வருட விசாரணையில் இந்த பழங்கால பொருட்கள் இந்தியாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தப் பொருட்கள் பல்வேறு காலகட்டத்தில் கடத்தப்பட்டன என்று கூறப்படுகிறது.
மேன்ஹாட்டன் மாவட்ட தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த ஆல்வின் பிராக் என்பவர், இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். மேலும், திருப்பிக் கொடுக்கப்படும் 307 பழங்கால பொருட்களில் பெரும்பாலானவை சுபாஷ் கபூர் என்பவர் மூலம் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். சுபாஷ் கபூர், ஆப்கானிஸ்தான், கம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இது போன்ற பொருட்களை சட்டவிரோதமாக கடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஒப்படைக்கப்படும் 307 கலைப் பொருட்களில், நான்சி வினர் என்பவரிடம் நடத்திய விசாரணை மூலம் 5 பொருட்களும், நயெப் ஹாம்சி என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு பொருளும் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைப் பொருட்கள், இந்தியாவின் துணைத் தூதர் ரந்தீர் ஜெய்ஸ்வால் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன. அமெரிக்க உள்துறை பாதுகாப்பு புலனாய்வு பிரிவின் இணை அதிகாரி டாம் லவ் பொருட்களை ஒப்படைத்தார்.
இந்த பழங்கால பொருட்களில், ஆர்ச் பறிக்கரா என்ற மார்பில் கலைப் பொருள் மிகவும் விலை உயர்ந்ததாகும். இந்த ஒற்றை கலைப்பொருளின் விலை மட்டுமே 85000 அமெரிக்க டாலர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பொருள் சுபாஷ் கபூரால் கடந்த 2002 மே மாதத்தில் நியூயார்க்குக்கு கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. தற்போது அது மீட்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தவிர, நடப்பு ஆண்டில் மட்டுமே, அமெரிக்காவால் 682 பழங்கால பொருட்கள் உரிய நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 84 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை 13 நாடுகளுக்கு அமெரிக்கா பழங்கால பொருட்களை திருப்பி ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.