கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை வழக்கில் இந்தியாவுக்கு விதிவிலக்கு கொடுக்க முடியாது என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கனடாவில் கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கனடா பிரதமர் கூறினார். இதனை அடுத்து இந்தியா கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்ததுடன் இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறுகையில், காலிஸ்தான் பிரிவினைவாதி பிரச்சினையில் கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் செயல்பாடுகளை அமெரிக்கா உற்று கவனித்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எந்த சிறப்பு விலக்கும் அளிக்கப்பட மாட்டாது. அதே சமயத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து ஜோபேடன் பிரதமர் மோடியுடன் நேரடியாக பேசுவாரா என்பதை இப்போது கூற முடியாது என்று கூறியுள்ளார்.