ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன்படி, செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஹவுதி படையினரின் ஏவுகணைகளை, அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகன் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் நோக்கி செல்லும் சர்வதேச கப்பல்களை செங்கடல் பகுதியில் தாக்கி வருகின்றனர். கிட்டத்தட்ட 12 ட்ரோன்கள், 3 வான் வழியாக தாக்கும் ஏவுகணைகள், 2 தரை வழியாக தாக்கும் ஏவுகணைகள் ஆகியவை, 10 மணி நேர இடைவெளியில் தாக்கியதாக கூறப்படுகிறது. இவற்றை, அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் இடைமறித்து தாக்குதல் நடத்தியதாக சொல்லப்பட்டுள்ளது. பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையில் கப்பல்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.