கடந்த ஜனவரி 8ஆம் தேதி, அமெரிக்காவைச் சேர்ந்த Astrobotic நிறுவனம், Peregrine என்ற லேண்டரை நிலவுக்கு அனுப்பியது. மிகக் குறைந்த செலவில் நாசாவின் உதவியுடன் இது அனுப்பப்பட்டது. ஆனால், ராக்கெட்டில் இருந்து லேண்டர் பிரிந்த உடனேயே, வெடிப்பு ஏற்பட்டு, எரிபொருள் கசிவு நேர்ந்தது. இதனால், விண்கலம் நிலவை எட்ட முடியாத நிலை உண்டானது. அதன்படி, அமெரிக்க தனியார் நிறுவனத்தின் நிலவு திட்டம் தோல்வியடைந்தது.
நிலவை எட்ட முடியாவிட்டாலும், இந்த விண்வெளி திட்டம் முக்கிய ஆய்வுகளில் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக, இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்தது. அப்போது, பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை, Peregrine கலம் தெற்கு பசிபிக் பகுதியில் கட்டுப்பாட்டுடன் தரையிரங்கியதாக Astrobotic நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.