நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் தாவரங்கள் மற்றும் மரங்களின் தகவல்களை அறியும் வகையில் QR கோடு முறையை தோட்டக்கலைத் துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.
உதகை மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா 1848 ஆம் ஆண்டு மிக் ஐவர் என்னும் ஆங்கிலேயரால் ஐரோப்பியா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து தாவரங்கள், மரங்கள், மூலிகைச் செடிகள் ஆகியவை நடவு செய்யப்பட்டன. இவை 1867-ல் முழுமையான தாவரவியல் பூங்காவாக உருவானது.
இந்த பழமையான மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் நூற்றாண்டுகளை கடந்தும் மாணவர்களுக்கு தகவல் களஞ்சியமாகவும் சுற்றுலா பயணிகளுக்கு காட்சி விருந்தாகவும் இருந்து வருகிறது.
இந்த பூங்காவை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இவற்றின் பின்னணி ,மரங்களின் பெயர், பூர்வீகம், வயது உள்ளிட்ட தகவல்கள் சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் QR கோடு வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை தங்கள் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.