லக்னோ, ஏப்ரல் 28, 2022:
2005 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், ஒலி மாசால் ஏற்படும் தீவிர பாதிப்புகள் மற்றும் அதன் பிற பாதகங்களைக் கருத்தில் கொண்டு, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் மற்றும் இசை அமைப்புகள் இயங்குவதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. எம்என்எஸ்-ன் தலைவர் ராஜ் தாக்கரே, மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற இறுதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றுவது குறித்த சர்ச்சை நாடெங்கும் ஏற்பட்டது. இந்நிலையில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஏப்ரல் 21ஆம் தேதி, வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளில் குறைந்த அளவிலேயே ஓசை இருக்க வேண்டும் என்றும், அதன் சத்தம் வழிபாட்டுத் தலங்களின் வளாகத்திற்குள் மட்டுமே கேட்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார். பின்னர், ஏப்ரல் 24ஆம் தேதி, கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற அம்மாநில அரசு உத்தரவிட்டது. அதன்படி, மொத்தம் 10923 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன என்றும், 35221 ஒலிபெருக்கிகளின் ஓசை குறைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. லக்னோவில் மட்டும், 2395 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதாகவும், 7397 ஒலிபெருக்கிகளில் ஓசை அளவு குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆக்ரா, மீரட், பரேலி, லக்னோ, கான்பூர், பிரயாக்ராஜ், கோரக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய எட்டு மண்டலங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.