இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், 16 ஏசி கம்பார்ட்மென்ட் களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 1128 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த வருட ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை உருவாக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போதைய நிலையில், வாரணாசி - புதுடில்லி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், மும்பை - அகமதாபாத் இடையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நிறுத்தம் இல்லா இந்த பயணத்தில், இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் 5 மணி நேரத்திற்கு சற்று கூடுதலாக இருந்தது. அத்துடன், இந்த சோதனை ஓட்டத்தில், 52 வினாடிகளில் 0-100 Kmph வேகத்தை எட்டி, புல்லட் ரயிலின் சாதனையை வந்தே பாரத் ரயில் முறியடித்துள்ளது.
இந்திய ரயில்வேயின் அறிக்கையின் படி, 491 கிலோமீட்டர் நீளமுடைய நிறுத்தமில்லா பயணத்தை, 5 மணி நேரம் 14 நிமிடங்களில் வந்தே பாரத் ரயில் கடந்துள்ளது. உச்சபட்சமாக, 130 Kmph வேகத்தில் சென்றுள்ளது. அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்லும் பயணத்தில், 5 மணி நேரம் 4 நிமிடங்களில் பயண தூரத்தை எட்டியுள்ளது. எனவே, இரண்டு நிறுத்தங்களுடன் செயல்படுகையில், இந்த ரயில், ஆறு மணி நேரத்தில் இலக்கை அடையும் என்று கூறப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், இந்த ரயில் சேவை வரும் நவராத்திரி அல்லது தீபாவளி சமயத்தில் தொடங்கப்படும் என்ற செய்தியை ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதே வழித்தடத்தில், சதாப்தி, தேஜாஸ் போன்ற அதிவேக ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், புல்லட் ரயில் இயக்கத்திற்கும் அரசாங்கம் பணியாற்றி வருகிறது. புல்லட் ரயில், அதே பயண தூரத்தை 2-3 மணி நேரத்தில் கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.