அடுத்த மாதம் இறுதியில் சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க முடிவு செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து சென்னை-கோவை, சென்னை - மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க ரெயில்வே திட்டமிட்டது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடக்கிறது. அதன்படி, அடுத்த மாதம் இறுதியில் சென்னை-நெல்லை இடையே வந்தே பாரத் ரெயிலை இயக்க முடிவு செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரெயிலில் முதற்கட்டமாக 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை வந்தடைய 10 மணி நேரம் ஆகும். வந்தே பாரத் ரெயில் 8 மணி நேரத்திற்குள் வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது. இதனால், 2 மணிநேரம் மிச்சமாகும். சென்னை-நெல்லை வழித்தடத்தில் 8 பெட்டிகளிலும் இருக்கைகள் உட்கார்ந்து செல்லும் வகையிலேயே அமைக்கப்பட உள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 4 ரெயில் நிலையங்களிலும் நின்று செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.