இத்தாலி நாட்டில் 1680ம் ஆண்டு பிறந்தவர் கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி . இயேசு சபையைச் சேர்ந்த இவர், 1710ம் ஆண்டு, கிறித்தவ மத்ததைப் பரப்பும் நோக்கில் இந்தியா வந்தார். மதுரையைச் சேர்ந்த சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழ் மொழியைக் கற்றார். தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டு தமிழ் ஆர்வலராக மாறிப் போனார். தனது பெயரைக் கூட தமிழில் மாற்றிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் அவரை ஈர்த்தது. முதலில் "தைரியநாதசாமி" என்றுதான் பெயர் மாற்றினார். பின்னர் தூய தமிழில் "வீரமாமுனிவர்" என்று வைத்துக் கொண்டார். வீரமாமுனிவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பல பணிகளைச் செய்துள்ளார்.
தமிழ் மொழி பல தலைமுறைகள் தாண்டியும் நிலைப்பெற்று நிற்கும் வரலாற்றை "வீரமாமுனிவர்" என்ற பெயர் இல்லாமல் எழுத முடியாது. வீரமாமுனிவர் காலம் என்பது அச்சு ஊடகம் உலகில் கால்பதித்திருந்த நேரம். அதுவரையில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வந்த தமிழ் மொழி நூல்களை அச்சில் ஏற்றும் எண்ணம் கொண்டார் வீரமாமுனிவர். ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. தமிழ் மொழியை சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதும் பொழுது புள்ளி எழுத்துக்களும் குறில் நெடில் வேறுபாடும் இல்லாமல் இருந்தது.
எடுத்துக்காட்டாக "தமிழ்க்களம்" என்ற சொல்லை சுவடிகளில் "தமிழககளம" என்றுதான் எழுத முடியும். புள்ளி வைத்தால் ஓலை பழுதாகிவிடும் என்ற காரணத்தினால் இவ்வாறு எழுதப் பட்டிருக்கும். படிக்கும் பொழுதுதான் அறிஞர்கள், இலக்கண முறைப்படி சொற்களை அடையாளம் கண்டு வாசித்தல் வேண்டும். மேலும், நெடில் எழுத்துக்கள் குறில் எழுத்துக்களைப் போலத்தான் எழுதப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு "ஏசு" என்ற சொல்லை சுவடிகளில் இருந்த எழுத்து மரபு கொண்டு எழுத வேண்டுமானால் "எசு" என்றுதான் எழுத வேண்டும். வாசிக்கும் பொழுது, தமிழ் அறிந்தவர்கள் குறில் நெடில் வேறுபாடை உணர்ந்து சரியாக வாசிக்க முடியும். ஆனால் அனைவராலும் எளிதில் வாசிக்க முடியாத மரபாகத்தான் அது இருந்தது. வீரமாமுனிவர் இந்த சிரமத்திற்கு ஒரு முடிவு கொண்டு வந்து, தமிழ் மொழியை அச்சில் ஏற்றி அழகு பார்த்தார். இவர் தமிழ் எழுத்து வடிவத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து, உயிர்–மெய் எழுத்துக்கள், குறில்-நெடில் எழுத்துக்கள் என அனைத்திற்கும் தனித்தனியே வடிவம் கொடுத்தார். பல தமிழ் நூல்களை இன்று நாம் படிப்பதற்கு, இவர் கொண்டு வந்த எழுத்துச் சீர்த்திருத்தமே காரணமாகும்.
தமிழ் மொழியில் அதுவரையில் அகராதி என்ற ஒன்றை யாரும் இயற்றவில்லை. "நிகண்டு" என்ற பெயரில் சொற்களஞ்சியங்களைத் தான் இயற்றி இருந்தார்கள். முதன்முதலில் "சதுரகராதி" என்ற பெயரில் தமிழ் அகராதியை இயற்றியவர் வீரமாமுனிவர் ஆவார். மேலும் பிற மொழியாளர்களுக்கு உதவும் வகையில் தமிழ்-லத்தின் மற்றும் தமிழ்-போத்துக்கீயம் ஆகிய அகராதிகளையும் உருவாக்கினார்.
ஒரு மொழிக்கு எழுத்து வழக்கு மற்றும் சொல்வழக்கு (பேச்சுவழக்கு) இரண்டும் இருப்பது சிறப்பு. தமிழில் எழுத்து வழக்கிற்கு இலக்கணம் இருந்தது. ஆனால் சொல்வழக்கு என்பதற்கு இலக்கணம் வரையறுக்கப் படாமல் இருந்தது. "கொடுந்தமிழ் இலக்கணம்" எனும் நூல் வாயிலாக சொல் வழக்கிற்கும் இலக்கணம் தந்தவர் வீரமாமுனிவரே.
தமிழர்களின் எழுத்துவழக்கு ‘செய்யுள்’ ஒன்றாக மட்டுமே இருந்தது. கல்வெட்டுகளில் இருந்து காப்பியங்கள் வரையில், கிடைக்கப்பெற்ற அனைத்துமே பாடல் வடிவில்தான் இருந்தன. அரசர்களால் மக்களுக்கு அளிக்கப்பட்ட சொத்துப் பத்திரங்கள் கூட பாடல் வடிவில் தான் இருந்தது. உரைநடை என்ற வடிவமே இல்லாத காலம் அது. வீரமாமுனிவர்தான் முதன் முதலில் தமிழுக்கு உரைநடை நூல் தந்தவர். தமிழின் முதல் உரைநடை நூல் அவர் எழுதிய "பரமார்த்த குரு கதைகள்" என்பதாகும்.
தமிழ் மொழியில் காப்பியம் இயற்றும் அளவிற்கு புலமைப் பெற்றார் வீரமாமுனிவர். இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றினார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு.
தமிழ் மொழிக்கு 23 நூல்களைக் கொடையாக அளித்த வீரமாமுனிவர் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னமும் நடைபெற்று வருகிறது. அவருடைய தனிப்பட்ட வாழ்வு, இறப்பு பற்றிய உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
என்றென்றும் தமிழர்கள் வாழ்க்கையில் தமிழாகவே வாழ்பவர் வீரமாமுனிவர் என்றால் மிகையாகாது.