பிப்ரவரி மாதத்தின் தொடக்கம் முதலே வியாழன் மற்றும் வெள்ளி கிரகங்கள் மிகவும் நெருக்கமாகத் தென்படுகின்றன. இரவு நேரத்தில், மேற்கு வானத்தில், இரு கோள்களும் அருகருகே பிரகாசமாக தென்படுகின்றன. இந்நிலையில், மார்ச் 1 மற்றும் 2ம் தேதிகளில், பூமியிலிருந்து பார்க்கும் பொழுது, இந்த 2 கோள்களும் ஒன்றாகச் சேரும் வகையில், மிக மிக நெருக்கமாக காணப்பட உள்ளன. இது மிகவும் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட 2 நாட்களிலும், வெள்ளி கிரகம் வியாழனுக்கு மிக அருகில் காணப்படும். இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளி வெறும் 0.5 டிகிரி அளவில் மட்டுமே இருக்கும். மேலும், இந்த நிகழ்வின் போது, நிலவும் அருகே காணப்பட உள்ளது. எனவே, இதனைக் காண, நாசா, ஐரோப்பிய விண்வெளி நிலையம் உள்ளிட்ட பல அமைப்புகள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றன. அதுமட்டுமின்றி, இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றன. இந்த நிகழ்வைக் காண பொதுமக்களும் ஆர்வமுடன் உள்ளனர்.