இணைய வசதி ஏதுமின்றி, கைபேசியில் வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யும் தொழில்நுட்பம் உள்நாட்டிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், இந்தியாவின் முக்கிய 19 நகரங்களில் இதற்கான பரிசோதனை நடக்க உள்ளது.
கைபேசியில், இணைய வசதி இல்லாமலும், சிம்கார்டு இல்லாமலும், நேரடியாக வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யும் தொழில்நுட்பம் டைரக்ட் டு மொபைல் தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது. தொலைத்தொடர்புத் துறை செயலர் அபூர்வ சந்திரா இந்த தொழில்நுட்பம் குறித்து அறிவித்துள்ளார். “இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் போன்கள் உள்ளன. அதில் பார்க்கப்படும் 69% கன்டென்ட், வீடியோ வடிவில் உள்ளது. இந்த நிலையில், 25 முதல் 30% பேர் டைரக்ட் டு மொபைல் தொழில்நுட்பத்துக்கு மாறுவதால், இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி அதிக உயரங்களை எட்டும்” என்று அவர் கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பத்தை ஐஐடி கான்பூர் மற்றும் சாங்கியா லேப்ஸ் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.














