உலகில் வேறெங்கும் காண இயலாத உயரிய வாழ்வியல் பண்பு ஒன்று தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது என்றால் அது "விருந்தோம்பல்” என்பதே ஆகும். விருந்தினர்கள் முகம் மலர்வதைக் கண்டு அகமகிழ்ந்தவர்களே தமிழர்கள் ஆவர். ஏழ்மையிலும் கூட ஒரு பகுதி தானியத்தைப் பயன்படுத்தாமல் பாதுகாத்து வைத்து, திடீரென்று வரும் வழிப்போக்கர்களுக்கு விருந்து படைத்திடும் அழகியப் பழக்கம் கொண்ட இனம் நமது தமிழினம். அரசனாய் இருந்தாலும் சரி, வறுமை வாட்டினாலும் சரி “பகுத்துண்டு வாழ்வதே வாழ்வு” என முன்னிறுத்தியதால்தான் தமிழனின் வாழ்வியல் முறை உலகின் சிறந்த வாழ்வியலாகத் திகழ்கின்றது.
"விருந்தே தானும்புதுவது புனைந்த யாப்பின் மேற்றே" என்றுத் தொல்காப்பியம் கூறுகிறது. “மருந்தே ஆயினும் விருந்தோடுண்” என்கிறார் ஒளவையார். திருக்குறளில் விருந்தோம்பலுக்கென்று ஒரு அதிகாரமே உள்ளது. இதுவே, தமிழர் வாழ்வில் விருந்தோம்பலுக்குரிய முக்கியத்தை உணர்த்துகிறது.
இல்லறத்தின் தலையாயநெறி விருந்தோம்பல் என்பதனைச் சிலப்பதிகாரம் மற்றும் கம்பராமாயணம் எடுத்துரைக்கின்றன. விருந்தோம்பலில் உபசரிக்கும் பாங்கே முதன்மையானது. முகம் மலர்ந்து உபசரிக்கும் போது, விருந்துப்பொருள் உப்பில்லாதக் கூழாக இருந்தாலும் சிறப்பாக இருக்கும் என்பதை
“ஓப்புடன் முகம் மலர்ந்து உபசரித்து உண்மை பேசி
உப்பில்லாத கூழிட்டாலும் உண்பதே அமுதமாகும்
முப்பழமொடு பாலன்னம் முகம் கருத்து ஈவாராயின், கப்பிய
பசியினோடு கடும்பசி ஆகுமன்றோ”
என்றப் பாடலும்
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”
என்றத் திருக்குறளும் விளக்குகின்றன.
உறவினர்களுக்கு உணவு முதலியனத் தந்துப் பாதுகாத்தல் சுற்றம் ஓம்பலாகும். பழந்தமிழர்களின் மரபுகளில் விருந்திட்டுச் சுற்றம் ஓம்புதல் குறிப்பிடத் தகுந்த வழக்கமாகும். மேலும், ‘காகம் கரைவதை’ விருந்தினர் வருகையைத் தெரிவிக்கும் சகுனமாகத் தமிழர்கள் கருதியுள்ளனர்.
திருவிழா நடைபெறும் நாட்களில், பெரியப் பானைகளில் உணவு தயாரித்து, சுற்றத்தாருக்கும், புதிதாக விழாப் பார்க்க வரும் விருந்தினருக்கும் பைந்நிணம் கலந்த நெய்ச்சோற்றை விருந்தாகத் தந்திருக்கின்றனர். இலக்கியம் கூறும் இந்த மரபு இன்றையத் திருவிழாக்களிலும் காணப்படுகிறது.
தங்களுக்கு என்று உணவைப் பத்திரப்படுத்தாமல் அனைவருக்கும் தந்துவிட்டு எஞ்சிய சோற்றை தலைவி விரும்பி உண்டுள்ளாள் என்பதை
“சாறு அயர்ந்தன்ன மிடா அச்சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலருணப்
பைந்நிணம் ஒழுகிய நெய்மலி அடிசில்
வசையில் வான் திணைப் புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு
அறம் புணைஆகத் தேற்றிப் பிறங்கு மலை”
என்றப் பாடல் விளக்குகிறது. மேலும், உணவு வேண்டி வரும் விருந்தினர்கள் தடையில்லாமல் உண்டு மகிழ்ந்து சென்று வர வாயில் கதவை திறந்தே வைத்திருக்கும் வளமனைகளும், பகுத்துண்டு வாழும் இல்லறச் சிறப்பும் குறிஞ்சிப்பாட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நம் முன்னோர், இரவுப் பொழுதில், உணவுக்கு வழிதேடி வரும் புதியவர்கள் தடுமாறா வண்ணம் அறிவிப்புச் செய்து உணவு வழங்கியுள்ளனர் என்பதைக் குறுந்தொகைப் பாடல் பதிவுசெய்கிறது.
மேலும், அக்காலத்தில் ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்குவதற்காகவே அறச்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. மதுரையில் உள்ள அறச்சாலையில் பல வகை உணவுகள் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்டதாக ‘மதுரைக் காஞ்சி’ என்னும் நூல் எடுத்துரைக்கிறது. அதன் அடிப்படையில் இன்றும் பல இடங்களில், கோவில்களில், அன்னச் சத்திரங்கள் வைத்து உணவு வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஒரு பண்பாட்டை அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்ல விளையாட்டுகளேப் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில், விளையாட்டில் கூட விருந்தோம்பும் மரபு கூறப்பட்டுள்ளது. நெய்தல் நிலத்து தலைவி சிற்றில் இழைத்து விளையாடும் பொழுதில், விருந்தினனாகத் தலைவன் வரக் கேட்பதை
“தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும்,சிறுசோறு குவைஇயும்,
வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது
இருந்தனமாக,எய்த வந்து,
‘தடமென் பணைத்தோள் மடநல்லீரே!
எல்லம் எல்லன்று அசைவு மிக உடையேன்
மெல்இலைப் பரப்பின் விருந்துஉண்டு, யானும்இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?”
என்றப் பாடல் விளக்குகிறது. விருந்தோம்பும் பழக்கம் சிறுவயதிலேயே பயிற்றுவிக்கப்படுதல் இதன் மூலம் புலனாகின்றது. இன்றும் கூட, நாம் குழந்தைகளுக்கு முதன் முதலில் கற்றுக் கொடுக்கும் விளையாட்டு "கைகளைப் பிசைந்து, கீரை மற்றும் பருப்பு கடைந்து அனைவருக்கும் கொடுத்து, தானும் உண்ணுமாறு செய்யும்" பருப்புக் கடையும் விளையாட்டே ஆகும். இன்று வரையில் நமது பண்பாட்டில் விருந்தோம்பல் பண்பு நிலைத்து நிற்க, இந்த பண்பாட்டுத் தொடர்ச்சியேக் காரணமாகும். இந்த உயரியப் பண்பாட்டை நாமும் அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்.