இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் டிசம்பர் 1 முதல் விசா இல்லாமல் மலேசியாவுக்கு பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுகிறது என்று அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் இனி விசா இல்லாமல் மலேசியாவிற்குள் நுழையலாம். இங்கு முப்பது நாட்கள் வரை தங்கலாம். இந்த நடைமுறை அடுத்த மாதம் டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். விசா தேவை இல்லை என்ற போதிலும் பயணிகளின் குற்றப்பின்னணி குறித்து அறிய பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படும். இந்தியாவை விட சீனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.