கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா நிறுவனம், எஸ்பிஐ வங்கிக்கு 2700 கோடி ரூபாய் கடன் தொகையை முன்கூட்டியே செலுத்தி கவனம் ஈர்த்துள்ளது.
தற்போது, வோடபோன் நிறுவனத்தின் பெயரில் சுமார் 1.98 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. குறிப்பாக, ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்காக மட்டும் ஏற்பட்ட கடன் 1.16 லட்சம் கோடி ரூபாய் ஆகும். வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் இருந்து 15,200 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ள வோடபோன் நிறுவனத்தின் ரொக்கப் பண மதிப்பு வெறும் 860 கோடி ரூபாய் ஆகும். அத்துடன், நோக்கியா, ஹவாய் உள்ளிட்ட பல தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு வோடபோன் ஐடியா செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை 15000 கோடி ரூபாயை எட்டியுள்ளது. குறிப்பாக, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலுவைத் தொகை 13.6 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், டவர் நிறுவனங்களுக்கு சுமார் 9500 கோடி ரூபாயும், நெட்வொர்க் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு 5500 கோடி ரூபாயும், வோடபோன் நிறுவனம் செலுத்த பாக்கியுள்ளது. இதனால், தொடர் சரிவில் இருக்கும் வோடபோன் நிறுவனத்தின் பங்குகள், வெள்ளிக்கிழமை அன்று, 1.32% சரிந்து, 8.97 ரூபாய்க்கு வர்த்தகமானது. இவ்வாறு, கடனில் தத்தளிக்கும் இந்த நிறுவனம், தற்போது, எஸ்பிஐ வங்கியின் 2700 கோடி ரூபாய் கடன் தொகையை முன்கூட்டியே செலுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்காக, வோடபோன் நிறுவனத்திற்கு நிதி தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக, பொதுத்துறை வங்கிகளில் அதிகத் தொகை கடன் பெறுவதற்கான முன்னோட்டமாக இந்தத் தொகையை நிறுவனம் திருப்பி செலுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால், நிறுவனத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்து, கூடுதல் கடன் பெறமுடியும் என்று நிறுவனம் நம்புகிறது. அண்மையில் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அக்ஷயா முன்ட்ரா, “இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகள் தொடங்குவதற்கான காலம், வங்கிகள் தரும் நிதியைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், வோடபோன் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது 5ஜி தொழில்நுட்ப சேவைகளுக்கான அறிமுகத் திட்டங்களை வெளியிட்டுள்ளன. இதனால், வோடபோன் நிறுவனத்திற்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனாலேயே, அவகாசம் கொடுக்கப்பட்டும், வோடபோன் நிறுவனம் முன்கூட்டியே கடனைத் திரும்பிச் செலுத்தியுள்ளது.