பாகிஸ்தானில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கியத் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கியத் தளபதியாக பஷீர் அகமது பீர் என்னும் இம்தியாஸ் ஆலம் இருந்து வந்தார். அவர், ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதிலும், அவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கச் செய்வதிலும் முக்கிய பங்காற்றியவர் ஆவார். மேலும், இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது, பயங்கரவாத அமைப்பில் இருந்து விலகியவர்களை மீண்டும் ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளில் சேர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.அத்துடன், ஜம்மு காஷ்மீரில், வேறு சில பயங்கரவாத அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, அவர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், இவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனுக்கு நம்பிக்கையானவராகவும் கருதப்படுகிறார். இந்நிலையில், நேற்று மாலை, இஸ்லாமாபாத் ராவல்பிண்டி பகுதியில், கடை ஒன்றின் வெளியே நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.