தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக்கடலில் புயல் உருவாகி இருப்பதையடுத்து நேற்று முன்தினம் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மொக்கா புயல் தீவிர புயலாக மாறியதால் வஉசி துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மொக்கா புயல் காரணமாக தமிழகத்தில் சில நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தூத்துக்குடியில் நேற்று பகலில் வெப்ப நிலை அதிகரித்து காணப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு மேல் வானிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டு பலத்த சூறாவளி காற்று வீசியது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த சூறாவளிக் காற்று சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது. அதன் பிறகு காற்று ஓய்ந்து சகஜ நிலை காணப்பட்டது. சில இடங்களில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.