நாசா மற்றும் ஈஎஸ்ஏ விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் செயற்கைக்கோள்கள் கிரீன்லாந்தில் கடந்த 13 ஆண்டுகளாக பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதை படம்பிடித்துள்ளன. அதன்படி, 2010 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் கிரீன்லாந்தில் இருந்து சுமார் 563 கன மைல் பனி உருகி நீராக மாறியுள்ளது. இது விக்டோரியா ஏரியை முழுமையாக நிரப்பக் கூடிய அளவுக்கு அதிகம்.
இந்த பனி உருகுதலால் கிரீன்லாந்தின் பனிப்பாறைகளின் தடிமன் சராசரியாக 3.9 அடி குறைந்துள்ளது. குறிப்பாக பனிப்பாறைகளின் விளிம்புகள் 21 அடி வரை குறைந்துள்ளது. இதில் சாகாரியா இஸ்ட்ரோம் பனிப்பாறை மட்டும் 246 அடி உயரம் குறைந்துள்ளது. கிரயோசாட்-2 மற்றும் ஐசெசாட்-2 என்ற இரண்டு செயற்கைக்கோள்கள் 2020 ஆம் ஆண்டு முதல் சேகரித்த தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பனிப்பாறைகளின் உயரத்தில் 3% மட்டுமே வேறுபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் சேர்ந்து சேகரித்த தரவுகள் மிகவும் துல்லியமானவை என்பதை இது காட்டுகிறது.