வைகை அணையில் இருந்து 58ஆம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணை கடந்த பத்தாம் தேதி 70 அடியை தொட்டது. அதனைத் தொடர்ந்து 11-ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்திற்கும், 16ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்ட வைகை பூர்வீக பாசன பகுதிக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. அணையில் இருக்கும் தண்ணீரை பொறுத்து கிருதுமால் நதிக்கு 10 நாட்கள் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் வைகை அணையில் இருந்து 58 ஆம் கால்வாய் பாசனத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனை ஏற்று இன்று முதல் வைகை அணையில் இருந்து 58 ஆம் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இன்று முதல் வினாடிக்கு 150 கன அடி வீதம் 300 மில்லி கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.