பெங்களூரில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து குடிநீர் கட்டணமும் உயர்கிறது.
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்று ஓராண்டுக்குள் ஐந்து உத்தரவாத திட்டங்களை கர்நாடகாவில் செயல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கர்நாடகா மாநிலம் நிதிச் சுமையில் சிக்கி உள்ளதாக எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி கர்நாடகத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு தலா மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் கட்டணத்தை உயர்த்த கர்நாடகா அரசும், பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது. இது குறித்து துணை முதல் மந்திரி டி.கே சிவகுமார் கூறியுள்ளதில் கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூருவில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் பெரு இழப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த இழப்பை ஈடுகட்ட மாதாந்திர குடிநீர் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக பெங்களூரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது