உக்ரைன் தானியங்களை கொண்டு செல்ல அனுமதிக்கும் "தானிய ஒப்பந்தத்தில்" இருந்து ரஷ்யா விலகுவதால் கோதுமை விலை உயரலாம் என தெரிகிறது.
கருங்கடலில் இருந்து மற்ற நாடுகளுக்கு உக்ரைன் தானியங்களை கொண்டு செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகியது. இதற்கு காரணம் கருங்கடலில் உள்ள ரஷ்ய கடற்படை மீது தாக்குதல் நடைபெற்றதுதான். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் தாக்குதலுடன் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது. எனினும் இந்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறிய பிறகு, சர்வதேச சந்தையில் தானியங்களின் விலை உயரக்கூடும் எனத் தெரிகிறது .
பிப்ரவரி இறுதியில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததை அடுத்து, கோதுமை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததைக் கட்டுப்படுத்த ஜூலை ஒப்பந்தம் உதவியது. இந்நிலையில் ரஷ்யாவின் இந்த முடிவானது ஏற்கனவே உயர்ந்த பணவீக்கத்தை மேலும் அதிகரிக்க செய்யும். அதோடு உலகளாவிய உணவு பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்யும் என அஞ்சப்படுகிறது.
எனவே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண துருக்கியும் ஐ.நா.வும் ஒப்பந்தத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அனால் ரஷ்யா தனது கடற்படை மீது தாக்குதல் நடத்துவது பற்றிய முழுமையான விசாரணைக்குப் பின்னரே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. இருப்பினும் உக்ரேனிய துறைமுகங்களில் இருந்து உணவுப் பொருட்களை கப்பல்களில் ஏற்றிச் செல்வதற்கான வேலை களில் துருக்கியும் ஐ.நா.வும் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் மாஸ்கோவிற்கு ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளனர்.
உக்ரைனில் உணவு தானியங்கள் உற்பத்தி மார்ச் மாதத்தில் கணிசமாக இருந்ததைப் போல இப்பொது இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் போர் காரணமாக இந்த ஆண்டு அதன் முழு உற்பத்தி திறன் மிகக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருடாந்திர கோதுமை மற்றும் பார்லி ஏற்றுமதியில் கால் பகுதிக்கும் அதிகமாகவும், சோள சரக்குகளில் ஐந்தில் ஒரு பங்கையும், சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியின் பெரும்பகுதியையும் கருங்கடல் பகுதி கொண்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் கருங்கடல் ஒப்பந்தம் முடிவடைவது உரத்திற்கான முக்கிய ஏற்றுமதி பாதையை பாதிக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் கோதுமை மற்றும் சோளத்திற்கான சேமிப்பு இடம் இல்லாமல் போகக்கூடிய சூழல் நிலவுகிறது. இதன் விளைவாக உக்ரேனிய விவசாயிகள் பயிர்களை உற்பத்தி செய்ய மறுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று லண்டனில் உள்ள ரபோபேங்கின் மூத்த ஆய்வாளர் மைக்கேல் மாக்டோவிட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.