தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கவும் கோரி திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார், மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் தான் டாஸ்மாக் கடைகள் குறைவான நேரம் திறக்கப்படுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள்,மதுவிற்பனை நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன் பரிசீலனை செய்யக்கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும், 21 வயது கீழ் உள்ளவர்களுக்கு மதுவிற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை கேட்ட நீதிபதிகள், மாணவர்களுக்கு மதுவிற்பனை 100 சதவீதம் செய்யப்படவில்லையா என்ற கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கு விசாரணையை வரும் டிச.1 தேதிக்கு ஒத்திவைத்தனர்.