ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள காட்டில் திடீரென தீப்பிடித்தது. அங்கு பலத்த காற்று மற்றும் வறண்ட காலநிலை காரணமாக காட்டின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் காடுகளை சுற்றியுள்ள கடல்சோ, டெஸ்கார்கமரியா உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் அந்த காட்டுக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த காட்டுத்தீயால் இதுவரை 8,500 எக்டேர் காடுகள் எரிந்து நாசமாகி உள்ளதாகவும், தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.