அரசு இறுதிச் சடங்கிற்குப் பிறகு ராணி 2ம் எலிசபெத்தின் உடல் அவருக்கு மிகவும் பிடித்த இடமான, வின்ட்சர் கோட்டையின் மைதானத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது .
இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு ராணியின் உடல் லண்டனுக்கு மேற்கே உள்ள வின்ட்சர் கோட்டைக்கு கொண்டு செல்லப்படும் என அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 1547 இல் இறந்த ஹென்றி VIII மற்றும் 1649 இல் தலை துண்டிக்கப்பட்ட சார்லஸ் I உட்பட பெரும்பாலானவர்கள் வின்ட்சர் கோட்டையின் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வின்ட்சர் கோட்டை பல ஆங்கிலேயர் மற்றும் பிரிட்டிஷ் அரசர்கள் மற்றும் ராணிகளின் இறுதி ஓய்வுக்கான இடமாகும். குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் 9, 2021 அன்று மறைந்த எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப்பின் சவப்பெட்டி அங்குள்ள ராயல் வால்ட்டில் பாதுகாக்கப்படுகிறது.
அதே இடத்தில் ராணியின் பெற்றோரும் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். வின்ட்சர் கோட்டையானது 11 ஆம் நூற்றாண்டில் வில்லியம் மன்னரால் கட்டப்பட்டது. இது உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய கோட்டை. மேலும் இக்கோட்டை ராணி எலிசபெத் உட்பட 40 பிரிட்டிஷ் மன்னர்களின் இல்லமாக இருந்துள்ளது.
மேலும் இக்கோட்டையில் , கிராஸ் க்னெத் எனப்படும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சிலுவையின் ஒரு பகுதி மற்றும் 3ம் எட்வர்ட் போரில் பயன்படுத்திய வாள் உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் உள்ளன.