மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், தனியார் வாகனங்களுக்கு புதிய சுங்கச்சாவடி கட்டண திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதில், ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். இந்த திட்டம், ஃபாஸ்டேக் அட்டையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் ஒவ்வொரு முறையும் ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் சிரமத்திலிருந்து விடுபடலாம்.
தற்போது, மாதம் ரூ.340 செலுத்தி உள்ளூர் பாஸ் பெறும் முறையில் ஆண்டுக்கு ரூ.4,080 செலவாகும். புதிய திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.1,080 மிச்சமாகும். 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தினால், அதிக அளவு நேரம் சுங்கச்சாவடிகளில் நிற்கும் அவசியம் குறையும். தனியார் வாகனங்கள் 53% சுங்கப் பயன்பாட்டில் இருந்தாலும், மொத்த வருவாயில் 21% மட்டுமே உள்ளன. வணிக வாகனங்கள் 74% வருவாயை உருவாக்குகின்றன. கடந்த ஆண்டு, தனியார் கார்கள் மூலம் ரூ.8,000 கோடி வருவாய் கிடைத்த நிலையில், மொத்த சுங்க வருவாய் ரூ.55,000 கோடியாக இருந்தது. புதிய திட்டம், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பயணத்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.