புதுவையில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பெண்களை நியமிக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுவையில் அரசு தீயணைப்புதுறையில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. தீயணைப்புதுறையில் 58 வீரர்கள், 12 டிரைவர்கள், 5 நிலைய அதிகாரி என மொத்தம் 75 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அனைத்து துறையிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில் தீயணைப்பு துறையில் மட்டும் வாய்ப்புகள் தரப்படுவதில்லை. எனவே பெண்களுக்கும் தீயணைப்பு துறையில் வாய்ப்பு தர வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து ஒரு நிலைய அதிகாரி, 17 வீரர்கள் என மொத்தம் 18 இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முதல்- அமைச்சர் ரங்கசாமி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் புதுவையில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.